தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த திரைக்கதைகளில் ஒன்று என ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘தனி ஒருவன்’ திரைப்படம் 2015ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, அரவிந்த் சாமி மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். நயன்தாரா கதாநாயகியாக நடித்த இப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ‘தனி ஒருவன் 2’ எப்போது வெளியாகும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ‘தனி ஒருவன் 2’ குறித்த ஒரு மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குனர் மோகன் ராஜா இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் ‘தனி ஒருவன் 2’ குறித்து கேள்வி எழுப்பினர்.
முதலில் பதிலளித்த இயக்குனர் மோகன் ராஜா, “இருவரும் ஒன்றாக இருக்கும்போது இந்த கேள்வியை கேட்டதற்கு நன்றி. ‘தனி ஒருவன் 2’ மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்கள் நன்றிகள். இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான படம். அர்ச்சனா எப்போதும் இது எங்களுடைய பெருமையான படம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். எல்லாமே தயாராக இருக்கிறது. தயாரிப்பு நிறுவனம் சரியான நேரத்தை சொல்கிறோம் என்று என்னிடம் கூறியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “‘தனி ஒருவன்’ படத்திற்காக தான் நான் முதன்முதலில் விருதே வாங்கினேன். எங்கள் தயாரிப்பில் உருவான மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘தனி ஒருவன்’. ‘தனி ஒருவன் 2’ முதல் பாகத்தை விட மிகப்பெரிய படம். அதனால் அதற்கான சரியான நேரத்தை பார்த்து படத்தை தொடங்க இருக்கிறோம். கண்டிப்பாக படம் வரும். படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ரவி, நயன் இருக்கிறார்கள். சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது தான் இப்போதுள்ள வேலை. ‘தனி ஒருவன் 2’ ஒரு பயங்கரமான திரைக்கதை” என்று கூறினார்.
ஆக, ‘தனி ஒருவன் 2’ திரைப்படம் உருவாகுவது உறுதியாகிவிட்டது. தற்போது சரியான நேரத்திற்காக படக்குழு காத்திருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றியை மிஞ்சும் வகையில் இரண்டாம் பாகம் இருக்கும் என்ற தயாரிப்பாளரின் கருத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என நம்பலாம்.


