Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சிவகுமார் மற்றும் கார்த்தி. வைரலாகும் புகைப்படம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

நினைவிடத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் நினைவிடத்திற்கு நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விஜயகாந்த் மறைவையொட்டி நடிகர் சங்கம் சார்பில் வருகிற 19-ந்தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும்.

புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கை பற்றி அன்று நடக்கும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

அரசுக்கும் சில கோரிக்கைகள் வைக்க இருக்கிறோம். அவர் ஒரு நல்ல ஆளுமை. நடிகர் சங்க தலைவராக இருக்கும்போது பல சவால்களை சந்தித்து சாதித்துள்ளார்.

எந்த வேலை என்றாலும் முன்னின்று செய்வார். அவரது புகழ் என்றும் ஓங்கி நிலைத்திருக்கும். நம்மிடம் அவர் இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

வருங்கால முதலமைச்சராக வேண்டியவர் விதி வசத்தால் போய்விட்டார். அவருடன் நான் சில படங்களில் நடித்திருக்கிறேன். கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை மெரினா அரங்கத்தில் கலைஞருக்கு மிகப்பெரிய விழாவை விஜயகாந்த் எடுத்தார்.

விழாவில் 3½ லட்சம் பேர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய கலைஞர் இன்னும் கொஞ்சம் தூரம் நீங்கள் என்னை கடந்து சென்றுவிட்டால் நான் முதலமைச்சராகி விடுவேன் என்றார். அவ்வாறே 1 மாதத்தில் கலைஞர் முதலமைச்சர் ஆனார். மலேசியாவில் கமல், ரஜினி உள்பட தமிழ் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நட்சத்திர விழாவின் மூலம் நடிகர் சங்க கடனை அடைத்தார். அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று கூறினார்.

Sivakumar karthi latest update viral
Sivakumar karthi latest update viral