தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் அவர்கள் தற்போது லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நா ரெடிதான் வரவா” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் சில சலசலப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யின் அரசியல் குறித்து பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. அதில் அவர், “நடிகர் விஜய் நடித்திருந்த பெரும்பாலான படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ஆனால் அப்போதெல்லாம் எதிர்காதவர்கள் இப்போது அவர் அரசியலுக்கு வர இருப்பதால் அவரது படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் படங்களை மட்டுமே எப்போதும் சுட்டிக்காட்டி வருவது ஏன் என்று தெரியவில்லை.
விஜயின் அரசியல் வருகை ஒரு சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால் விஜய் அரசியலுக்கு வருவது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு ஆபத்து இல்லை. சீமானுக்குத் தான் ஆபத்து என பிரச்சினையை கிளம்பி வருகின்றனர். எப்போதும் நானும் விஜயும் அடித்துக் கொள்ள மாட்டோம். இரண்டு பேரும் சேர்ந்து மற்றவர்களை காலி செய்வோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 இடங்களில் தனித்துப் போட்டியிடும். அதில் 20 இடங்களில் பெண்களுக்கு ஒதுக்கப்படும். யாருடனும் கூட்டணி கிடையாது. என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


