45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
சென்னையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர், தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது குப்பையில் 45 பவுன் தங்க நகை கிடந்ததை அவர் பார்த்தார். உடனடியாக அதை எடுத்து வைத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தை கொண்டிருக்காமல், அதை எடுத்து காவல் நிலையத்தில் நேர்மையுடன் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த நகை உரியவர்களிடம் சேர்ந்தது. வறுமையிலும் பத்மாவின் நேர்மையை பார்த்த அனைவரும் அவரை பாராட்டினார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இன்று பத்மாவை தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்தார். தனது குடும்பத்துடன் வந்த பத்மாவை பாராட்டி சால்வை அணிவித்து, தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகின. மேலும் பத்மாவை அழைத்து பாராட்டிய ரஜினிக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்தினையும், பாராட்டையும் தெரிவித்தார்கள்.


