Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கே.பி.ஒய். பாலா கதாநாயகனாக அறிமுகம்: ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

raghava lawrence master wishes to kpy bala's first movie

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கே.பி.ஒய். பாலா, தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மேடை நகைச்சுவை மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களிலும் தனது நகைச்சுவை பாணியால் பலரையும் கவர்ந்து வருகிறார். மேலும், ஏழை எளியோருக்கு உதவி செய்வதிலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு தனது சொந்த முயற்சியில் உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

சமீபத்தில், கே.பி.ஒய். பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இணைந்து பல சமூக நலப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் இணைந்து ஒரு பெண்ணுக்கு ஆட்டோ பரிசளித்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. பிறருக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தை பாலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸும் தனது அறப்பணிகளுக்காக அறியப்படுகிறார். பல்வேறு காலகட்டங்களில் அவர் செய்த உதவிகள் ஏராளம்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கே.பி.ஒய். பாலா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். “வணக்கம் மக்களே! என் தம்பி @bjbala_kpy தனது வாழ்நாள் கனவை நனவாக்கப் போவதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் மூலம் அவரை அறிமுகப்படுத்துவதாக நான் அறிவித்திருந்தேன். ஆனால் ஒரு வாரத்திற்குள்ளேயே, ஒரு நல்ல தயாரிப்பாளர் ஒரு நல்ல கதையுடன் அணுகினார். ஆம், அவரது முதல் படம் விரைவில் வெளியாக உள்ளது! என் அன்பு தம்பிக்கும், படக்குழுவினர் @sherief_filmmaker @namita.krishnamurthy @mervinsolomon @viveksivaofficial @balaji_k_raja @adhimulam_creations ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், கே.பி.ஒய். பாலா விரைவில் கதாநாயகனாக திரையில் ஜொலிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.