Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

இரவின் நிழல் திரை விமர்சனம்

Iravin-Nizhal Movie Review

சினிமா ஃபைனான்சியராக இருக்கும் நந்து (பார்த்திபன்) தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரிடம் திரைப்படம் எடுப்பதற்காக வட்டிக்கு பணம் வாங்கும் இயக்குனர், சில சிக்கல்களால் பணத்தை திருப்பி தரமுடியாத சூழல் ஏற்பட அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இறந்த இயக்குனரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நினைத்து நந்துவின் மனைவி குழந்தையுடன் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இதனிடையே இவரை கைது செய்ய போலீஸ் துரத்துகிறது. எல்லோரையும் இழந்து வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்த சூழலில் பாழடைந்த ஆசிரமம் ஒன்றில் நந்து மறைந்து கொள்கிறார். நந்துவின் வாழ்க்கை எப்படி தொடங்கியது? இந்த சமூகம் அவருக்கு கொடுத்தது என்ன? என்ன என்ன பிரச்சனைகளை எல்லாம் அவர் சந்தித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் புது முயற்சியாக அவர் இந்த படத்தை இயக்கி இருப்பதாலே அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறதோ, அதை தாண்டி இப்படி ஒரே ஷாட்டில் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில் பார்த்திபனின் உழைப்பு படத்தின் மூலம் உணரமுடிகிறது.

கதையின் தேர்வும் திரைக்கதை வடிவமும் விறுவிறுப்பாக அமைந்து படத்தின் கவனத்தை சிதற விடாமல் கவனித்துக் கொள்கிறது. படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் இப்படத்தில் நடிப்பதிலும் அவர் கவனம் செலுத்தியிருப்பதால் கூடுதல் சுமையை சுமந்து படத்தை கொடுத்துள்ளார். சில இடங்களில் தொய்வு இருந்தாலும் படத்தை விட்டு பார்வையாளர்கள் விலகி செல்லும் படி இல்லை.

பார்த்திபன் எட்டு வயது சிறுவனாக தோன்றி, இளம் வயது வாலிபனாக நடுத்தர வயது மனிதனாக என்று பல்வேறு காலகட்டத்தில் தோற்றப் பொருத்தத்தோடு கூடிய நடிகர்களை நடிக்க வைத்திருகிறார். அந்தந்த வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்தில் நந்துவாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் இவர்கள் பெற்றுள்ளனர். முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜோஸ்வா, பிரவீன்குமார், சந்துரு, ஆனந்த் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் சினேகா குமாரி, சகாய பிரிகிடா, சாய் பிரியங்கா ருத் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பார்த்திபனின் மனைவி சிலக்கம்மாவாக வரும் சகாய பிரிகிடா, காதலி சினேகா குமார் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள். குறிப்பாக தெலுங்கு கலந்து தமிழ் பேசி நடித்திருக்கும் சகாய பிரிகிடா எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார்.

பரமானந்தா சுவாமியாக ரோபோ சங்கரும், அவரது சிஷ்யை பிரேமகுமாரியாக வரலட்சுமியும் நிகழ்காலத்தை பிரதிபலிக்கின்றனர். ரோபோ சங்கர் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார், வரலட்சுமி கொடுத்த வேடத்தையும் வேலையையும் சரியாக செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்தர் வில்சன் பெரிய தூணாக இருந்து பார்த்திபனின் கனவை பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் விரக்தி, வெறுப்பு, துயரம் என்று கலவையாக ஒலிக்க செய்து பாவம் செய்யாதிரு மனமே பாடலில் நம்மை கரைக்கிறார்.

மொத்ததில் இரவின் நிழல் – ஒளி.

Iravin-Nizhal Movie Review
Iravin-Nizhal Movie Review