ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை சல்மான்கான் ஆழ்ந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
மும்பை வோர்லி பகுதியில் நேரு மைதானத்தில் நடைபெறும் வியாக்யான்மாலா நிகழ்ச்சி பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நேரு மைய அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு நாள் நிகழ்வு, ஆர்.எஸ்.எஸ்-இன் பயணம், சமூகத்தில் அதன் பங்கு, அதன் எதிர்காலத்தை வடிவமைக்கும் யோசனைகள் மற்றும் கண்ணோட்டங்கள் குறித்து சிந்திப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், ‘ஆர்எஸ்எஸ்சின் பணி தனித்துவமானது. இதுபோன்ற பணி உலகில் வேறு எங்கும் இல்லை என்று நாங்கள் கூறுவது வழக்கம். இப்போது, அதை நாங்கள் நேரடியாக அனுபவிக்கிறோம். ஏனெனில் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் சங்கத்தைக் காண வருகிறார்கள்,
சங்கம் வேறு எந்த அமைப்புடனும் போட்டியிட்டு உருவாக்கப்படவில்லை. எந்தவொரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு எதிர்வினையாகவும் ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்படவில்லை. மேலும் அது யாருக்கும் எதிராகச் செயல்பட்டதும் இல்லை. எங்கள் பணி யாரையும் எதிர்க்காமல் நாட்டுக்காக மேற்கொள்ளப்படுகிறது.
சங்கம் தேசிய ஒற்றுமையில் கவனம் செலுத்துகிறது, சங்கம் புகழையோ அதிகாரத்தையோ நாடுவதில்லை’ என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், திரைப்படத் தயாரிப்பாளர் சுபாஷ் கை மற்றும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் பிரசூன் ஜோஷி ஆகியோருடன் அமர்ந்திருந்த சல்மான் கான், மோகன் பாகவத் உரையாற்றியதை மிகுந்த கவனத்துடன் கேட்டார். சல்மான்கான் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர், தங்கள் ஸ்மார்ட்போன்களில் அவரைப் புகைப்படம் எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


