சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் சாதாரண பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, தனது கடின உழைப்பால் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினிகாந்தின் பயணம், ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்திற்கான கதைக்களமாகவே பார்க்கப்படுகிறது.
நடிகராக திரையுலகில் அறிமுகமாகி படிப்படியாக முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த ரஜினிகாந்த், தனது பயணத்தில் பல்வேறு சவால்களையும் சந்தித்துள்ளார். குறிப்பாக, 2002-ம் ஆண்டு அவர் இயக்கி நடித்த ‘பாபா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததைத் தொடர்ந்து சுமார் 3 ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.
அதன்பின்னர் 2005-ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் மூலம் ரஜினிகாந்த் அதிரடியான ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “நான் யானை இல்ல; குதிரை. டக்குனு எழுந்திருச்சிடுவேன்” எனக் கூறியிருந்தார். அவரது தன்னம்பிக்கைக்கு இந்த வார்த்தைகள் சிறந்த உதாரணமாக அமைந்தன.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது, அந்தச் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவது குறித்து அவர் தனது நெருங்கிய வட்டாரங்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் வாழ்க்கையின் முக்கியமான கட்டங்கள், திரையுலகில் அவர் சந்தித்த சவால்கள், பெற்ற வெற்றிகள் மற்றும் ரசிகர்களால் மறக்க முடியாத பல்வேறு தருணங்கள் இந்தப் படத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா அளித்த பேட்டி ஒன்றில், தனது தந்தை சுயசரிதை எழுதி வருவதை உறுதிப்படுத்தியிருந்தார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களை அவர் பெற்றுள்ளார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

